வியாழன், 24 நவம்பர், 2011

தேவைப்படுகிறதோர் பிடிப்பு..

 
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
வாழ்க்கைக்கானதோர்
பிடிப்பு..
நிலத்தின் பிடிப்பு
சமவெளிகளில் நிலைத்திருப்பதாய்
வேண்டப்படுகிறதோர் பிடிப்பு
வாழ்வின் நீட்டிப்பிற்கு..
இலக்கியமோ
இலட்சியமோ
பேரன்போ
பெருங்கனவொன்றோ...
தேங்காய்சில்லுகள் சிதறுமாற்போல்
மனமுடையாதிருக்க
காலநிலையென மாறிக்கொண்டேயிருக்கும்
மனநிலைகளை
மீட்டெடுத்து மீளமைக்க
எல்லோருக்கும் தேவைப்படுகிறதோர்
பிடிப்பு
நீரின் பிடிப்பு
தாழ்வுகளில் நிலைத்திருப்பதாய்...
வற்றிய குளமென
வாழ்க்கை வறளாதிருக்க
வழுக்கிவிடாதிருக்க
சொட்டுச் சொட்டாயிருக்கும்
வாழ்க்கையை ஒன்றிணைக்க
எல்லோருக்கும் தேவைப்படுகிறதோர்
பிடிப்பு..
விதை பிடித்து உருக்கொள்ளும்
பழங்களென வாழ்வமைக்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக