திங்கள், 15 ஆகஸ்ட், 2011

குளிருலவும் இப்பெருநகரங்களும் நாங்களும்..



தேவைகளற்றும்
நிரம்பல்களற்றுக் கிடக்கின்றது மனது
நொந்து பயனில்லை
நோகாதிருப்பதும் இயலவில்லை...
அண்ணா கனடாவில்
தம்பி அவுஸ்திரேலியாவில்
நாங்கள் சுவிசில்
வாய்க்கொழுப்புடன்
சொல்லிக் கொள்வதற்குப் பின்
சேர்ந்திருத்தலையும்
நிலவிரவுச் சோற்றுக்கவளத்தின்
ருசியையும் வலிந்து மறைத்துவிடுகிறோம்..
அவுடியிலும் பென்ஸிலும்
அலைந்துதிரியும் ஆடம்பரத்திலும்
அப்பாவின் சைக்கிளின்
பின்னால் புத்தகப்பையும்
முன்னால் நாமுமாய்
பள்ளி சென்றது
நினைவுப் படுக்கையில் சுகமாய்...
இந்தப் பீட்ஷாக்களும் பேகர்களும்
அம்மம்மா சுட்டுத்தரும்
அப்பத்திற்கு ஈடாகுமா தெரியவில்லை..
சுத்துமாத்துக்களுக்கும்
பம்மாத்துக் கதைகளுக்கும் பின்னால்தான்
பதுங்கியிருக்கிறோம்
குளிருலவும் இப்பெருநகரங்களில்...
நிறப்பிரிவுகள்,
இனப்பிரிகைகளுக்கிடையில்
ஒரு நூறு அவமானங்களைச் சுமந்தபடியும்
பெருமிதத்தோடுதான் சொல்கிறோம்
அண்ணா கனடாவில்
தம்பி அவுஸ்திரேலியாவில்
நாங்கள் சுவிசில்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக