திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மனக்கழுதை

மனக்கழுதை
மேயத் தொடங்கிற்று
காகிதத்திற்காய்...
அகண்ட அண்ட சராசரங்களில்
ஆதி வீரியமுடைத்து
அதில் கனியெனத் தொங்கும் விண்மீன் துவாரங்களில்
சூரியப் பிரகாசம் மிஞ்சி
ஆழ்கடல் இடைவெளிகளில் நன்முத்தென
ஆணி வேரில் வசிக்கும் நாவல் மரப் பொந்துகளில்
பழம் பெருமைகள் ஊறி ஊறி உரம் பெற்று
போர் அறைந்த பூமியின் சொல்லொணாத் துயரங்களில்
வலிகளால் வலிமையுற்று
நேர் வகிடெடுத்த முதிர்வறியோரின்
கக்கத்து முடிச்சுகளில்
அனுபவ வளைவுடன்
எந்த தீக்கும் கசங்காததாய்
இரண்டாம் வராகமாய் பூமி தோண்டிக்
கொதி நெருப்புக் குழம்பிலும்
தின்பதற்காயன்று
சொற்கலாளான எழுத்துக்களில்
இந்த வரலாற்றைத் தொடர்ந்தெழுதுவதற்கான
காகிதத்திற்காய்
மனக்கழுதை
மேயத் தொடங்கிற்று
மறுபடியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக